இந்த அவமானம்
எப்படி
இவ்வளவு இனிப்பாக
இருக்கிறதென்று தெரியவில்லை.
யாரேனும் பாத்திரத்தை 
மாற்றியிருப்பார்களோ?

காலங்களுக்கு இடையே....

அந்தக் காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது.
அந்தக் காலத்தில் ராக்கெட் இருந்தது.
அந்தக் காலத்தில் விமானங்களும் இருந்தன.
அந்தக் காலத்தில் அணுகுண்டுகளும்கூட இருந்தன.
அந்தக் காலத்தில் இல்லாமல் இருந்தவர்
குர்தா சாஹேப் மட்டும்தான்.
அவரும் இந்தக் காலத்தில் அவதரித்துவிட்டார்.
ஆமாம், அந்தக் காலம் எங்கேயிருந்தது?
அது நமது காலத்துக்கு வெளியேயிருந்தது.
அந்தக் காலம்
நம்மைக் காலத்துக்கு வெளியே நிறுத்தியிருந்தது.
அந்தக் காலம் நம்முடையதாய் இல்லை.
இந்தக் காலமும் அவர்களுடையதாய் இருக்கிறது.

அசைந்து அசைந்து
மலைப்பாம்பு
வந்து சேர்வதற்குள்
மரணம்தான்
எவ்வளவு நேரம்
காத்திருக்க வேண்டியதிருக்கிறது?

புத்தம் புதிய ஏற்பாடு

2014 ஆண்டுகளுக்கு முன்பு 
இதே தினத்தில்
தவறுதலாய்ப் பிறந்துவிட்டார் யேசு.
அடல் பிகாரிஜி அவரை மன்னியும்!
நீங்களும்தான் குர்தா சாகேப்...
பிளாஸ்டிக் சர்ஜரியே
அறியாத காலத்தில் பிறந்தவர்
தான் செய்தது இன்னதென்று மட்டும்
அறிந்திருப்பாரா என்ன?
தயவுசெய்து முள் முடிகளை
காந்தியின் தலைக்கு மாற்றுங்கள்.
சிலுவைக்கு யாராவது
சிக்காமலா போவார்கள்?

சிவாஜி சாகவில்லை

‘கை வீசம்மா கைவீசு' பாடிக்கொண்டே
சாவித்திரியுடன் செத்துப்போன சிவாஜி
சில வருடங்களுக்குப் பிறகு
உயிர்த்தெழுந்தார்.
இப்போது அவர் ரத்தத்தில்
உப்பின் அளவு அதிகரித்திருந்தது.
சதா துடித்துக்கொண்டிருந்த
இடப்பக்க மீசையை அடக்க
யாரோ அவர் கையில்
ஒரு பதக்கத்தைத் திணித்தார்கள்.
இப்போது செத்துக்கொண்டிருந்த
ஸ்ரீகாந்தை அணைத்தபடி
‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’
பாடத் தொடங்கினார்.
ஆனால் ஒன்று,
இந்தமுறை சிவாஜி சாகவில்லை.

ஆதியில் இருந்தது இப்போது இல்லை



விலக்கப்பட்ட கனியைப் போல
அந்தரத்தில் தொங்குகிறது பூமி.
தேசங்களின் வரைபடங்களின் மீது
கள்ளத்தனமாய் ஊர்கிறது
கரும்புகை சர்ப்பமொன்று.
பச்சைக்கண்கள் மினுமினுக்க
காலத்தைப் போலவே அசையும்
பாம்பின் வயிறு
நூற்றாண்டுக்கால இரை விழுங்கி
புடைத்திருக்கிறது.
சமயங்களில் அதன் தாகம் தணிக்க
கடல் எழுந்துவந்து
நாவை நக்கிச் செல்கிறது.
கொலைவாள் போல
சுற்றிச்சுழலும்
பாம்பின் நாக்கு
சூரியனை விழுங்குவதற்கான எத்தனத்திற்கானது.
இப்போது ஏதேனும் தேச வரைபடத்தை உருவி
நம் நிர்வாணம் மறைக்கலாம்.
ஏனெனில் வரலாற்றில் இது முதல் பாவமல்ல.

       


நாயகர்களின் வருகை

அரசர் வருகிறார்! அரசி வருகிறார்!
இளவரசர் வருகிறார்! இளவரசி வருகிறார்!
தெருப்புழுதி பறக்க தேர்கள் விரைகின்றன.
நம்புங்கள் நாமிந்த பொற்காலத்தில் வசிக்கிறோம்.
தேர்க்கால்களில் கன்றுகள்
அடிபடுவதுபற்றி கவலையில்லை.
108ஐ அழைத்தால் உடனடி சிகிச்சை.
கடல் விழுங்கி
வாமனர்களின் நகரங்கள் அழியுமொரு நாளில்
தொடங்கி விட்டன
நகரங்களைப் பங்கிட்டுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை.
பேச்சுவார்த்தை மேசையில்
கிடத்தப்பட்டிருப்பது நீங்களும் நானும்தான்.
இரண்டாம், மூன்றாம், எட்டாம், பதினான்காம்
மன்னர்களின் மகுடங்களை அளவிடும்
வாய்ப்பு வரலாறு அழைக்கிறது.
மகுடங்களின் அளவு ஏறக்குறைய
சவப்பெட்டிகளின் அளவுகளை ஒத்திருப்பது
தற்செயலானது என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும்.
தூரதேசங்களின் கிளர்ச்சி
உங்கள் செவிகளை எட்டாதிருக்கட்டும்.
கண்கள் விறைத்த பிணங்களை முன்னிட்டு
முறையீடு செய்பவர்களின் பக்கம்
உங்கள் கவனம் திரும்பாதிருப்பது இன்னமும் நல்லது.
நேற்று ஆண்குழந்தை பிறந்த
நண்பனின் குறுஞ்செய்தியை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்.
வரலாறு பள்ளங்களை நிரப்பும்.
அரசர் வருகிறார்! அரசி வருகிறார்!
இளவரசர் வருகிறார்! இளவரசி வருகிறார்!
நம்புங்கள் நாமிந்த பொற்காலத்தில் வசிக்கிறோம்.