ஒற்றைத்துளியில் உறையும் கடல்

மாலைக்கும் அதிகாலைக்கும் இடையில்
இரவு ஒரு பறவையைப் போல கடக்கிறது.
அந்த கரியநிறப் பறவை
நம் தலைமீதுதான் பயணிக்கிறது
என்பதை வேண்டுமானால் நாமறியாதிருக்கலாம்.
ஆதிவாசி வனாந்திர மய்யத்தில்
கனன்றெரியும் நெருப்பில் ஒழுகும்
மாம்சத்துளி போலவே
உருகி வழிகிறது காலம்.
ஆம், அவன் வளர்ந்திருக்கிறான்.
முன்பு அவன் ஒரு சொல்லைப் போல இருந்தான்.
இப்போது சொல்லாகியிருக்கிறான்.
ஒரு நாளை நான்காய் எட்டாய் மடித்து
அனாயசமாய்க் கிழித்தெறிகிறான்.
அந்த குதூகலம் நம்மிடமில்லை
என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
சகல ஆண்களிலும் பெண்களிலும்
குழந்தைமையைப் பறித்த குற்றவுணர்வோடு
அவனருகே மண்டியிடுபவரை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
இனி அவரது கோப்பை
அவனது சிறுநீர்ச்சூட்டால் நிரப்பப்படட்டும்.
கடவுள் ஆசிர்வதிக்கப்படட்டும்.

(எதிர்வரும் 30.09.10 அன்று முதல் பிறந்தநாளைச் சந்திக்கவிருக்கும் என் மகன் கத்தார் நவீன்சித்தார்த்திற்கு.)

முகாம்தேசம்


















இரண்டு கவிதைகளை
உன் வலைக்குள் திணிக்க முயன்றாய்.
இப்போது உன் விதைப்பைக்குள்
இரண்டு பறவைகள்.
-----------
அவன் தன் மனைவிக்கு உதவுவதற்காகத்தான்
சமையலறைக்குள் நுழைந்தான்.
அவளை விடவும்
அழகான ஒரு தோசையைச் சுடுவதே
அவனது நோக்கமாயிருந்தது.
முதல் கரண்டி மாவிலேயே
தோசை என்பது
மையத்திலிருந்து விளிம்புக்குப் பரவும் அதிகாரம்
என்பதைக் கண்டுபிடித்தான்.
சில தோசைகள்
பிய்ந்தும் கருகியும் வர ஆரம்பித்தபோது
அவன் தன் கோட்பாடுகளைக் கைவிட்டான்.
ஒரேயொரு தனித்துவமான தோசையை
சுட்டே தீருவதென்ற ஆவலில்
சமையலறையிலிருந்த
மிக்சர், ஜீனி, கடலை மற்றும்
கரப்பான்பூச்சிகளின் செதில்களைத்
தூவத்தொடங்கினான்.
இருந்தபோதிலும் 
தோசையின் எல்லைகளில்
தூவப்படும் எண்ணெய்
சாளரங்களற்ற சமையலறையில்
புழுங்கித் தவிக்கும் மனைவியின்
வியர்வை வாசனையை விடவும்
மேலானதில்லை என்பதை உணர்ந்தபோது
அவன் தன் கைவிரல்களைத்
துண்டாக்கித் தூவினான்.
இப்போது தோசை முழுமையடைந்திருந்தது.
--------------
ஆகச்சிறந்த படைப்புகள் எழுதி
ஆகச்சிறந்த புத்தகங்களாக்கி அவன்
ஆகச்சிறந்த எழுத்தாளர் ஆகியிருந்தான். 
பின்னும் அவன்
ஆகச்சிறந்த மனிதர்கள் மீது
ஆகச்சிறந்த அவதூறுகளைச் 
சொல்லத் துவங்கினான்.
ஆகச்சிறந்த மரணங்கள் மீது
ஆகச்சிறந்த பொய்களைப்
பரப்பவும் செய்தான்.
ஆகச்சிறந்த வாசகர்கள் அவனுக்கு
ஆகச்சிறந்த கடிதங்களை எழுதினர்.
அல்லது ஆகச்சிறந்த வாசகர்களைப் போல
ஆகச்சிறந்த கடிதங்களை எழுதினான்.
ஏற்கனவே தோல்வியின்
புழுக்கத்திலிருந்த கடவுள் அவனுக்கு
ஆகச்சிறந்த ஆசிர்வாதங்களை அனுப்பியிருந்தார்.
பூமிக்குத் தாமதாய் வந்த
கடவுளின் ஆசிர்வாதங்கள்
ஒரு அழகிய பழத்தின் வாசனையைப் போலிருந்தது.
கடவுள் விட்டதிலேயே
ஆகச்சிறந்த குசு இதுதான் என்று சொல்லிக்கொண்டான்.
--------------
ஒரு தேசத்தின் வரைபடத்தை
வரைவதற்காக அவர்கள் கூடியிருந்தார்கள்.
முதலில் மலைகளையும் காடுகளையும்
நதிகளையும் வரைபடத்த்லிருந்து
நீக்கிவிடுவதென்று தீர்மானித்திருந்தனர்.
அவை இப்போது 
அயல்தேச நிறுவனங்களின் உடைமைகளாயிருந்தன.
பின்னுமிருந்த விலங்குகளிலும் மனிதர்களிலும்
விலங்குகளை மருந்துகளின் உற்பத்திக்காகவும்
மனிதர்களை மருந்துகளின் விற்பனைக்காகவும்
ஒதுக்கிவைத்தனர்.
ஆட்சியாளர்கள், போலீஸ்வீரர்கள், ராணுவத்தியாகிகளை
எந்த வகையினத்தில் சேர்ப்பதென்ற 
குழப்பம் நீடித்தது. 
அதற்குள் அண்டைநாட்டொன்றின் 
வரைபடம் புகழ்பெற்றிருந்தது.
இனிவரும் தேசங்களின்
வரைபட மாதிரி அதுவே என புகழப்பட்டது.
அது முதலில் ஒரு
சதுரங்கப்பலகையைப் போலிருந்தது.
ஒரு துப்பாக்கி வைத்தால்
பல மரணங்கள் விளைந்தன.
ஒரு பேச்சுவார்த்தை வைத்தால்
பல கூடாரங்கள் முளைத்தன.
ஒரு பதுங்குகுழி வெட்டினால்
சதுரங்கப்பலகையிலிருந்து
குண்டுகளைப் பொழிந்தபடி
விமானங்கள் பறந்தன.
முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள்
இருதரப்பிலும் வெட்டும் காயகளாகப் பயனாகினர்.
இறுதியில் சதுரங்கப்பலகை
முகாம்களின் வடிவத்தில் மாறியது. 
முகாம்களைப் போல் தேசத்தின் 
வரைபடத்தை அமைப்பதென்றும்
தேசத்தை முகாம்களைப் போல்
அமைப்பதென்றும் அவர்கள் முடிவுக்கு வந்தனர்.

   நன்றி : லும்பினி

முலைகளின் ஆல்பம்















பேருந்து படிக்கட்டு விளிம்பில்
நின்றுகொண்டிருந்த நான்
சடாரென்று கோணம் மாற்றினேன்
எனக்கும் மேலே
கைதூக்கி நின்ற பெண்களின்
மார்புகளை ரசிப்பதற்காய்.

சற்றுநாள் முன்னரே
மணமாகித் தாய்வீடு வந்திருந்த
எதிர்வீட்டுப்பெண்ணின்
மார்பு ரசித்தேன்
மாசமாயிருப்பாளோ என்னும்
உறுத்தலோடேயே.

கல்லூரியில் கண்ட
கழுத்துமேல் துப்பட்டா போர்த்திய
கொழுத்த முலைகள்
இன்றைய இரவை
ஈரப்படுத்தக்கூடும்.
திரைகளெங்கும் நாயகிகள்
முலைகளாய் உணரப்படுகிறார்கள்.

அடிக்கடி ஆடைகளைச்
சரிசெய்துகொள்வது வேறு
நம் கனவுகளின் பரப்பை
அகலப்படுத்துகின்றன.
மார்புகள் இல்லாது போனால்
எல்லாப் பெண்களோடும்
உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.

எப்போதேனும் தட்டுப்படும்
மார்புகளின் ஸ்பரிசம்
கிளர்ச்சியூட்டும் வேளையில்.
இப்படி எண்ணத்தோன்றும்
வெறித்து நோக்கும்
ஆண்களின் கண்களே
முலைக்காம்புகள் ஆயினவோ.

                                                   (நன்றி : கருப்பு 2002)